அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடங்கியது!
24 வருடம் கழித்து நேரு குடும்பத்தை தவிர்த்த காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு நாடு முழுவதும் தொடங்கியது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் போட்டியிடவில்லை என கூறிய நிலையில், தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது.
அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் வாக்களிக்கின்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட 10,000 பேர் வாக்களிக்கவுள்ளனர். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் இந்த தேர்தல் மூலம் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். வாக்குப்பதிவு முடிந்த பிறகு அனைத்து வாக்குப் பெட்டிகளும் டெல்லி தலைமை அலுவலகத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு, அக்டோபர் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்படும்.