அதிமுக உட்கட்சி பிரச்சனை சட்டப்பேரவைக்குள் வரக்கூடாது.! ரகசிய உத்தரவு போட்ட இ.பி.எஸ்.!
வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், உட்கட்சி பிரச்சனையை பேசக்கூடாது எனவும், தொகுதி சார்ந்த பிரச்னையை மட்டும் பேச வேண்டும் எனவும் நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இபிஎஸ் ரகசிய உத்தரவு போட்டதாக தகவல் கசிந்துள்ளது.
இம்மாதம் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை நடைபெறுவதை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முக்கியமாக, சட்டப்பேரவைக்குள் உட்கட்சி பிரச்சனை வரக்கூடாது என முக்கிய உத்தரவு இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு போடப்பட்டதாம். சட்ட பேரவைக்குள் தொகுதி சார்ந்த பிரச்சனை மட்டுமே எழுப்பப்பட வேண்டும் எனவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏனென்றால், அதிமுக தற்போது இபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்பு என இரு பிரிவுகளாக இருக்கிறது. இதில் இபிஎஸ் தரப்பு பக்கம் தான் தற்போதைக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. இருந்தும் ஓபிஎஸ் தரப்பு கொடுத்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆதலால், வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் என இருக்கைகளில் யார் யார் அமர்வார்கள் என் அரசியல் வட்டாரம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது.