கர்நாடகாவில் அமைச்சர் பதவிக்கான சண்டை! காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் ராஜினாமா மிரட்டலால் பரபரப்பு!

புதிய அரசு கர்நாடகாவில் பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரசில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப்போவதாக இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி நாளை பதவியேற்கிறார். வியாழக்கிழமையே கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து, கர்நாடக அமைச்சரவை இலாகாக்களை இறுதி செய்துள்ளார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி நிலையான ஆட்சி அமைக்கப்படும் என்று தெரிவித்தார். துணை முதலமைச்சர் , அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்தார்.

குமாரசாமி பதவியேற்பு விழாவுக்காக பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி, டெல்லி ஆகிய 6 மாநில முதலமைச்சர்களும், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்களும் விழாவில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்

புதிய அரசு பதவியேற்பதற்கு முன்பாகவே காங்கிரசில் உட்கட்சிப் பூசல் வலுத்துள்ளது. எம்.பி.பாட்டீலுக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதலமைச்சர் பதவி அளித்தால் ராஜினாமா செய்யப்போவதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான சிவானந்த பட்டீல், யஷ்வந்த் ஆகியோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை சந்தித்த இருவரும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதே போல், தங்கள் சமூகத்தினருக்கு 5 அமைச்சர் பதவியும் துணை முதலமைச்சர் பதவியும் தராவிட்டால் ராஜினாமா செய்யப்போவதாக, லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சித்தராமையாவிடம் முறையீடு செய்துள்ளனர்.

இதனிடையே தம்மை பாஜகவினர் விலைக்கு வாங்குவது போல் காங்கிரஸ் கட்சி வெளியிட்ட குதிரை பேர ஆடியோ போலியானது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம் ஹெப்பூர் தமது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பது காங்கிரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment