குடியரசு தலைவர் தேர்தல்; ஜூன் 27ஆம் தேதி யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்!
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் என அறிவிப்பு.
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, திரிணாமுல் காங்கிரஸ் துணைத் தலைவர் பதவியில் இருந்து யஷ்வந்த் சின்கா ராஜினாமா செய்திருந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை ஜூன் 27ம் தேதி காலை 11.30 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளோம் என்று என்சிபி தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட சரத் பவார், பாரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி மறுத்த நிலையில், யஷ்வந்த் சின்ஹா தேர்வானார். ஐஏஎஸ் அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா வெளியுறவுத்துறை, நிதி அமைச்சராக இருந்தவர். கடந்த 2018-ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகியதை அடுத்து திரிணாமுல் காங்கிரசில் இணைந்த அவர், துணைத்தலைவராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.