மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்த உண்மை.. உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
மருத்துவப் பரிசோதனையில் ‘ஆண்’ என்று அறிவிக்கப்பட்ட 23 வயதுப் பெண் நீதிமன்றத்தை நாடி நீதியை வென்றார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் கிராமப்புற காவல்துறைக்கு பெண் காவலர்கள் ஆட்சேர்ப்பில் தாழ்த்தப்பட்டோர் பிரிவின் கீழ் 23 வயது பெண் ஒருவர் விண்ணப்பித்திருந்தார். இந்த கிராமப்புற பெண் காவலர் தேர்வில், அந்த பெண் எழுத்து தேர்வு, உடல் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், காவலர் பதவிக்கு விண்ணப்பித்த அந்த பெண், இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் ஆண் என்று தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது, மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கருப்பையும், கரு முட்டையும் இல்லையென தெரியவந்ததை அடுத்து, அவர் பெண் இல்லை, ஆண் தான் என உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு ஆண், பெண் உள்ளிட்ட இரு குரோமோசோம்களும் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவ பரிசோதனையில் ஆண் என் தெரியவந்ததை அடுத்து, பெண் காவலர்கள் தேர்வில் தகுதியற்றவராக ஆனார். இதனை எதிர்த்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, உடல் ரீதியான பிரச்சினைகள் எனக்குத் தெரியாது. அதனால் என்னை நிராகரிப்பது சரியாகாது என மனுதாரர் வாதத்தை முன்வைத்தார். இதன்பின் பேசிய நீதிபதிகள், மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை, அவர் தனது வாழ்க்கையை ஒரு பெண்ணாகத் தான் தொடர்ந்துள்ளார். காவலர் தேர்வில் அவர் எழுத்து மற்றும் உடல் தேர்வுகளுக்கு தகுதி பெற்றுள்ளார். மேலும், அவரது கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்திலும் ஒரு பெண் என்ற பெயரில்தான் இருக்கின்றன என தெரிவித்தனர்.
இதனால் அவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசு முடிவெடுத்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆனால், காவல் பணி அல்லாத வேறு பணியில் அவர் அமர்த்தப்படுவார் என்றும் குறிப்பிட்டார். எனவே, சம்பந்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்ற அவர், மருத்துவப் பரிசோதனையில் ‘ஆண்’ எனத் தெரியவந்ததால் பதவி இழந்த அந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் மாநிலக் காவல் துறையில் பணி நியமனத்தை இரண்டு மாதங்களுக்குள் முடிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.