#ELECTION2022: அதிமுக-பாஜக இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது என்ன?

Default Image

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வோம் என அதிமுக மற்றும் பாஜக அறிவிப்பு.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அதிமுக-பாஜக இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது என்ன? என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 80% குறையாமல் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளது. பாஜக கோரிய 20% இடப்பங்கீடு வழங்க முடியாது எனவும் திட்டவட்டமாக அதிமுக உள்ளதாகவும், எந்தெந்த மாநகராட்சிகளில் எந்தெந்த இடம் வேண்டும் பட்டியலை கொண்டு வாருங்கள் ஆலோசிப்போம் என பாஜகவுக்கு அதிமுக பதில் அளித்துள்ளது.

அனைத்து மாநகராட்சிகளிலும் தங்களுக்கு 20% இடம் ஒதுக்க வேண்டும் என்று பாஜக கேட்க, அனைத்து மாநகராட்சிகளிலும் 20 % இடப்பங்கீடு வழங்க முடியாது என அதிமுக பதில் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட மாநகராட்சிகளிலாவது 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் பாஜக  கூறியதற்கு, எந்தெந்த மாநகராட்சிகளில் எந்த எந்த இடம் வேண்டும் என்ற பட்டியல் தாருங்கள் பரிசீலிக்கிறோம் எனவும் அதிமுக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாஜக மாவட்ட செயலாளர்களோடு மீண்டும் ஒருமுறை கலந்து பேசி பட்டியல் தயார் செய்கிறோம் என்று பாஜக தெரிவித்ததை அடுத்து, பட்டியல் தந்த பிறகு பாஜகவுக்கு இடப்பங்கீடு குறித்து முடிவு செய்வோம் என அதிமுக கூறியதாக தெரிகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இழுபறியில் இருந்த முதற்கட்டம் பேச்சுவார்த்தை நிறைவடைந்ததை அடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வோம் என அதிமுக மற்றும் பாஜக அறிவித்துள்ளது.

இதனிடையே, ஒருபுறம் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் எங்களின் கட்சி நலன் பாதிக்காத வகையில் எதுவாக இருந்தாலும் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மறுபுறம் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும். அதிமுக – பாஜக இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது. பாஜக வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்