#Breaking:தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்;தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்!

நாகை:ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.

நாகையில் இருந்து நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,மீனவர்கள்,ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர்,அரிவாள்,ரப்பர் பைப்,கட்டை உள்ளிட்ட பொருட்களால் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

அதன்பின்னர்,படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி,செல்போன்,மீன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள் நான்கு பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே,இதே போல் நேற்று முன்தினம் நாகை மாவட்டம்,புஷ்பவனம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,மீன்பிடி வலைகள்,ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.