#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தயார் – மாநில தேர்தல் ஆணையம்

வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறந்து தான் உள்ளது. அங்கு மக்கள் வந்து தான் செல்கின்றனர். எனவே கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் உள்ள நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 4 முதல் 6 வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 3-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் தீவிரமாக இருப்பதால், பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது உகந்ததாக இருக்காது என தெரிவித்தனர்.

அதற்க்கு பதிலளித்த நீதிபதி, வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகள் திறந்து தான் உள்ளது. அங்கு மக்கள் வந்து தான் செல்கின்றனர். எனவே கொரோனா கட்டுப்பாடுகளுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும், இதனை நடத்துவதற்கு ஏன் மனுதாரர்கள் ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, தேர்தல் அட்டவணையும் தயார் நிலையில் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதிகள், அரசு தரப்பில் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கம்போல் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும், சுகாதாரத்துறை அதிகாரிகள் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக பிற்பகலில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என கூறப்படுகிறது.