அதிமுக மூத்த தலைமை பேச்சாளர் தரங்கை கண்ணன் காலமானார்- இபிஎஸ், ஓபிஎஸ் இரங்கல்..!
அதிமுக மூத்த தலைமை பேச்சாளர் தரங்கை கண்ணன் வயது முதிர்வின் காரணமாக காலமானார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த தலைமை பேச்சாளர் தரங்கை கண்ணன் அவர்கள் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் மீதும், கழகத்தின் மீதும், தொடர்ந்து கழகத் தலைமையின் மீதும், மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு தரங்கை கண்ணன் அவர்கள், சிறந்த தலைமைக் கழகப் பேச்சாளராக கழகத்தின் கொள்கைகளையும், சாதனைகளையும், எதிர்க்கட்சியினரின் பொய்ப் பிரச்சாரங்களையும், நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மிகி சிறப்பான முறையில் எடுத்துரைத்தவர்.
மேலும், கழகப் பணிகளையும் தீவிரமாக ஆற்றியவர். அன்புச் சகோதரர் தரங்கை கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இனைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.