#Breaking:பிரபல கடையில் கொள்ளைப்போன நகைகள் சுடுகாட்டில்… கண்டுபிடித்து கெத்து காட்டிய போலீசார்!

வேலூர்:பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் கொள்ளைப்போன 15 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிச.15 ஆம் தேதி வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.அதன்படி,15 கிலோ தங்கம் மற்றும் 500 கிராம் வைரம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதனையடுத்து,இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும்,நகைக்கடையை சுற்றி உள்ள சாலைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வரும் போலீசார், தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வந்த நிலையில் நகைக் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது.

அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த புகைப்படத்தில் இருப்பவரின் அங்க அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில்,கொள்ளை சம்பவம் தொடர்பாக குச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த டீகா ராமன் என்பவரை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.

கொள்ளை சம்பவம் நடைபெற்ற நாளில் அப்பகுதியை சுற்றி பதிவான செல்போன் எண்களைக் கொண்டு ராமன் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையில் ஈடுப்பட்டவர்களில் ராமனும் ஒருவர் என்பது தெரிய வந்ததையடுத்து,அதன்பின்னர்,மேலும் விசாரணை மேற்கொண்டதில் நகைகள் இருக்கும் இடம் குறித்து அவர் முன்னுக்கு பின்னாக தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,கொள்ளையில் ஈடுப்பட்ட ராமன் குறிப்பிட்ட அனைத்து இடங்களையும் காவல்துறையினர் கடப்பாரை உள்ளிட்டவற்றைக் கொண்டு தோண்டி காலை முதல் சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.

அதன்படி,உத்திரகாவடி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள சுடுகாட்டு பகுதியில் நகைகள் புதைக்கப்பட்டிருப்பத்தை காவல்துறையினர் உறுதி செய்த நிலையில்,வேலூர் மாவட்ட எஸ்.பி.ராஜேஸ் கண்ணா அவர்களின் தலைமையிலான காவலர்கள் சம்மந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று புதைக்கப்பட்ட 15 கிலோ தங்க நகைகளை தற்போது மீட்டுள்ளதாகவும், அந்த நகைகள் உருக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.