பள்ளி விபத்து : இது யாராலுமே ஜீரணிக்க முடியாத ஒரு செய்தி – சசிகலா
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த சிறுவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சசிகலா.
நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், உயிரிழந்த மாணவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வி.கே.சசிகலா அவர்கள் இதுகுறித்து வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘திருநெல்வேலியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கழிவறை கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து மூன்று மாணவச்செல்வங்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதை யாராலுமே ஜீரணிக்க முடியாத ஒரு செய்தியாக, மிகவும் வேதனையோடு பார்க்கவேண்டியுள்ளது.
மேலும், இதே விபத்தில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், நான்கு மாணவர்களும் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். மாணவச்செல்வங்கள் நம் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள், அவர்களின் வாழ்வில் முறையான கவனமும், தகுந்த பாதுகாப்பும், மிகுந்த அக்கறையும் செலுத்தவேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. குறிப்பாக, கல்வி கூடங்களுக்கு மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஆகவே கல்வி கூடங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால்தான், இது போன்ற, தவறுகள் ஏற்படாமல் அவர்களால் தடுக்க முடியும்.
மேலும், இந்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து, தவறு இழைத்தவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். இதில், உயிரிழந்த மூன்று மாணவர்களையும், இழந்து வாடும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், அவர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.