#Breaking:டிச.13 முதல் 23 ஆம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் – ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு!

சென்னை:அதிமுக கிளைக் கழக நிர்வாகிகள்,பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல்கள் வரும் டிச.13 முதல் 23 வரை நடைபெறும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அதிமுக உட்கட்சி தேர்தல் 13.12.2021 முதல் 23.12.2021 வரை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

மேலும்,இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி – 30, பிரிவு – 2ன்படி “கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்” என்ற விதிமுறைக்கேற்ப முதல் கட்டமாக, தமிழ் நாட்டில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள், நகர வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான கழக அமைப்புத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக, 13.12.2021 முதல் 23.12.2021 வரை, கீழே குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணைப்படி நடைபெற உள்ளன.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் நாள்:13.12.2021 & 14.12.2021:

  • கன்னியாகுமரி கிழக்கு,கன்னியாகுமரி மேற்கு,தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு,ஈரோடு புறநகர் மேற்கு,சேலம் மாநகர்,சேலம் புறநகர், திருநெல்வேலி,விருதுநகர் கிழக்கு,விருதுநகர் மேற்கு,மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு,நாகப்பட்டினம்,
  • மயிலாடுதுறை,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்,நீலகிரி,ஈரோடு மாநகர்,ஈரோடு புறநகர் கிழக்கு,நாமக்கல்,விழுப்புரம்,கிருஷ்ணகிரி கிழக்கு,கிருஷ்ணகிரி மேற்கு,திருவண்ணாமலை வடக்கு,திருவண்ணாமலை தெற்கு,காஞ்சிபுரம்,திருவள்ளூர் கிழக்கு,திருவள்ளூர் தெற்கு,திருவள்ளூர் வடக்கு,திருவள்ளூர் மத்தியம்,திருவள்ளூர் மேற்கு,செங்கல்பட்டு கிழக்கு,செங்கல்பட்டு மேற்கு.

2-ஆவது கட்டம் தேர்தல் நடைபெறும் நாட்கள் -22.12.2021 & 23.12.2021: 

  • தூத்துக்குடி வடக்கு,தூத்துக்குடி தெற்கு,சிவகங்கை,ராமநாதபுரம்,தேனி, திண்டுக்கல் கிழக்கு,திண்டுக்கல் மேற்கு,திருவாரூர்,புதுக்கோட்டை வடக்கு,புதுக்கோட்டை தெற்கு,தஞ்சாவூர் வடக்கு,தஞ்சாவூர் தெற்கு,திருச்சி புறநகர் தெற்கு,திருச்சி மாநகர்,திருச்சி புறநகர் வடக்கு,கோவை மாநகர்,
  • கோவை புறநகர் வடக்கு,கோவை புறநகர் தெற்கு,திருப்பூர் புறநகர் மேற்கு,தருமபுரி,கள்ளக்குறிச்சி,வேலூர் மாநகர்,திருப்பத்தூர்,வேலூர் புறநகர்,கடலூர் வடக்கு,கடலூர் தெற்கு,கடலூர் கிழக்கு,கடலூர் மேற்கு,ராணிப்பேட்டை,வட சென்னை வடக்கு (கிழக்கு),வட சென்னை வடக்கு (மேற்கு),வட சென்னை தெற்கு (கிழக்கு),வட சென்னை தெற்கு (மேற்கு),சென்னை புறநகர்,தென் சென்னை வடக்கு (கிழக்கு),தென் சென்னை வடக்கு (மேற்கு),திருப்பூர் மாநகர்,தென் சென்னை தெற்கு (கிழக்கு),திருப்பூர் புறநகர் கிழக்கு,தென் சென்னை தெற்கு (மேற்கு).

மேலும்,இப்பொறுப்புகளுக்கான கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிட விரும்புபவர்கள், கீழ்க்காணும் விவரப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள விருப்ப மனு விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தி, அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

கிளைக் கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • கிளைக் கழகச் செயலாளர் – ரூ.200 கட்டணம்.
  • அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் – கட்டணம் இல்லை.

பேரூராட்சி வார்டு கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • வார்டு கழகச் செயலாளர் – ரூ.300 கட்டணம்.
  • அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர், மேலமைப்புப் பிரதிநிதிகள் – ரூ.200 கட்டணம்.

நகர வார்டு கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • வார்டு கழகச் செயலாளர் – ரூ.500 கட்டணம்
  • செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள் – ரூ.300 கட்டணம்.

மாநகராட்சி வட்டக் கழக நிர்வாகிகள் தேர்தல் :

  • வட்டக் கழகச் செயலாளர் – ரூ.2,000 கட்டணம்,
  • அவைத் தலைவர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், பொருளாளர்,மேலமைப்புப் பிரதிநிதிகள் – ரூ.700.

மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்தில் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான மினிட் புத்தகம், விண்ணப்பப் படிவம், ரசீது புத்தகம், வெற்றிப் படிவம் முதலானவற்றை தேர்தல் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தலைமைக் கழகத்தில் இருந்து பெற்றுச் சென்று அவற்றை, மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள், தேர்தல் ஆணையாளர்களுக்கு பிரித்து வழங்க வேண்டும். மேலும், தேர்தல் நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் முழுமையாக செய்திட வேண்டும்.

மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் தேர்தல்களை நடத்தி முடித்து, வெற்றிப் படிவம், ரசீது புத்தகம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் முதலானவற்றை தேர்தல் முடிவுற்ற இரண்டு நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணையாளர்களிடம் இருந்து பெற்று அதனை தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

மேற்கண்ட அறிவிப்பிற்கிணங்க,கழக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, முதற்கட்ட கழக அமைப்புத் தேர்தல்கள் சுமூகமாக நடைபெறும் வகையில் உடன்பிறப்புகள் அனைவரும், தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதே போல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.