வாகன சோதனையின் போது வேன் மோதி காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – வேன் ஓட்டுநர் கைது..!
வாகன சோதனையின் போது வேன் மோதி காவல் ஆய்வாளர் உயிரிழந்த நிலையில், வேன் ஓட்டுநர் கைது.
கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராக கனகராஜ் பணியாற்றி வருகிறார். அவர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த வேன் நிற்காமல், அவர் மீது மோதி விட்டு உடனடியாக சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தி சென்ற வேனை சிசிடிவி காட்சிகளை வைத்து இன்று காலை தோகைமலையில் போலீசார் மீட்டனர். மேலும் வேன் ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது வேன் ஓட்டுநர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.