காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது – கமலஹாசன்

காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியை பாராட்டி கமலஹாசன் ட்வீட். 

சென்னை : சென்னையில் இன்று கனமழை உடன் காற்றும் கடுமையாக வீசி வருவதால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கல்லறையின் மீது இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்துவிட்டார் என்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள், அந்த இளைஞன் உயிருடன் இருப்பதை அறிந்து உடனடியாக அவரை தனது முதுகில் சுமந்து சென்று ஆட்டோவில் ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தக்க நேரத்தில் இளைஞரை காப்பாற்ற முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதிக்க உதவிய ஆய்வாளர் ராஜேஸ்வரி அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.