பாலியல் வன்கொடுமை முயற்சி..? பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு..!

கர்நாடகாவில் 23 வயதான திருமணமான பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார்.

கர்நாடகாவின் யாத்கிர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிதவரை எதிர்த்ததற்காக திருமணமான 23 வயது பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று காலை ஷாஹாபூர் நகருக்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்தது.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் உயிரிழக்கும் முன் வாக்குமூலம் அளித்தார். அந்த வாக்குமூலம் பதிவு செய்த பிறகு சூரபுரா போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளியை பிடிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, கங்கேப்பா என்பவர் உயிரிழந்த பெண் மீது நீண்ட காலமாக ஆசை வைத்துள்ளார். மேலும்  தன்னுடன் உறவு கொள்ளும்படி பலமுறை கங்கேப்பா அப்பெண்ணை கட்டாயப்படுத்தி உள்ளார்.

எனினும், இதுகுறித்து அப்பெண் போலீசில் புகார் அளிக்கவில்லை. இந்த விஷயம் கிராமப் பெரியவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர்கள்  திருமணமான பெண்ணை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கங்கேப்பா எச்சரித்தனர். ஆனால், சம்பவம் நடந்த அன்று அதிகாலையில் அப்பெண்ணின் கணவன் வெளியே சென்றபோது கங்கேப்பா வீட்டிற்குள் புகுந்து பாதிக்கப்பட்ட பெண் தூங்கும்போது பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அப்போது அவர் எதிர்த்தபோது, ​​கங்கேப்பா அவளைத் தாக்கி, அவள் மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் என தெரிவித்தனர்.