“அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு” – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு..!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டப்பேரவையில் இன்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதாப்படி, அரசுப்பள்ளியில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு, அவர்களது 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில், பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் மற்றும் சட்ட படிப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

கடந்த ஆட்சியில், மருத்துவ படிப்புக்கான உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது தொழிற்கல்வி படிப்புகளுக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேருவது குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்நிலையில்,அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்,அவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது.

இந்த நிலையில் வழங்கப்பட்டுள்ள தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன் வடிவை ஒரு மனதாக நாங்களும் ஆதரிக்கிறோம்”,என்று தெரிவித்துள்ளார்.