நிலக்கரி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் நான் முழு மனதுடன் வரவேற்பேன்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள்,இன்று வடசென்னையில் உள்ள அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நிலக்கரி இருப்பு சரிபார்க்கப்பட்டது. அப்படி சரிபார்க்கபட்டதில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் மட்டும் 2.38 லட்சம் டன் நிலக்கரி பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பில் உள்ளதற்கும் வித்தியாசம் உள்ளது. அதாவது, 2.38 லட்சம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் பதிவேட்டில் மட்டும் உள்ளது.இந்த பதிவேட்டு முறை நடப்பு ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வண்ணம் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நிலக்கரி விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் நான் முழு மனதுடன் வரவேற்பேன். நிலக்கரி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச நேரம் தந்தால் விளக்கம் தர தயார். மின் உற்பத்திக்காக வாங்கிய கடன் குறித்து நானும் விளக்கம் அளித்துள்ளேன்.
கடந்த ஆட்சியிலேயே நாங்கள் ஆய்வு செய்தபோது நிலக்கரி இருப்பு குறைந்து இருந்தது தெரியவந்தது. நாங்கள் கண்டுபிடித்ததை தான் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. கடந்த ஆட்சி மீது அவப்பெயரை ஏற்படுத்தவே இது போன்ற குற்றசாட்டை கூறுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.