நாடாளுமன்றத்தில் 15 ஆவது நாளாக முடங்கிய கூட்டம்..!

கடைசி வார நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 15 ஆவது நாளாக இன்று முடங்கியுள்ளது. 

கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 13-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மழைக்கால கூட்டத்தொடர் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், மீதமுள்ள ஐந்து நாட்களில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று காலை ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

பின்னர் இன்று நடந்த கூட்டத்திலும் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விவாதிக்க கூறி கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இதனால் 15 ஆவது நாளாக மழைக்கால கூட்டத்தொடர் முடங்கியது. மேலும், நாளை காலை 11 மணி வரை இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியிலும் கூட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.