OBCக்கு இடஒதுக்கீடு: அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல்.!

நடப்பாண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் OBC பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல் என்று அதிமுக தலைமை அறிக்கை வெளியீடு.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், 1980ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30% இட ஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தி, தமிழகத்தில் சமூக நீதிக்கான முதல் வெற்றியை நிலை நாட்டினார்கள்.

கல்வித் துறையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்திற்கு உதவுகின்ற வகையில், 27% என்பதற்குப் பதிலாக 50% என்று இட ஒதுக்கீடு செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசுத் துறைகள், மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, அனைத்துக் கல்வி நிலையங்களின் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி, 1991ம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

தமிழக சட்டமன்றப் பேரவையில் 1993ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்களையும், அரசின்கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவினை நிறைவேற்றி, இட ஒதுக்கீட்டிற்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்தார்கள். தமிழக்தில் இன்றும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்தபோது, மருத்துவப்படிப்பில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இதர மத்திய கல்வி நிறுவனங்களில், OBC சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு 14.3.2018 அன்று கடிதம் எழுதி, தொடர்ந்து, பல நினைவூட்டுக் கடிதங்கள் எழுதப்பட்டன. பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக சார்பில், மருத்துவம், பல் மருத்துவ இட நிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய தொகுப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம் முதன் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் பெட்டிசன் ஒன்றினை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் (MCI) அடங்கிய குழு ஒன்றை அமைத்து, 2021-2022 முதல் OBC இட ஒதுக்கீட்டினை செயல்படுத்துவது பற்றி ஆராயும்படி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, 2020-21 கல்வி ஆண்டு முதலே 27% OBC இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு – அதிமுக சார்பிலும் மற்றும் இதர கட்சிகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் SLP file செய்யப்பட்டது. மதியா அரசு 2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாலும், ஏற்கனவே மருத்துவ படிப்பிற்கு கால தாமதம் ஆனதாலும், மருத்துவ கல்வி சேர்க்கையில் 27 சதவீத ஒதுக்கீட்டினை செயல்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை வாய்ப்பில்லை என்று கூறியது.

வரும் 2021-2022 கல்வி ஆண்டு முதல் OBC-க்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தக் குழு அமைக்கப்படும் என்று கூறி இந்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அதிமுக அரசு பெற்றது. இதன்படி 27 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மத்திய அரசு குழு ஒன்று அமைத்தது. இக்குழுவில் தமிழ் நாடு அரசின் உறுப்பினராக டாக்டர் பி. உமாநாத், இ.ஆ.ப. அவர்கள் 13.8.2020 அன்று நியமிக்கப்பட்டார்.

இக்குழுவின் அறிக்கையின்படி நேற்று (29.7.2021, மருத்துவக் கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு முதலே (2021-22) அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அதிமுக சார்பில் வரவேற்கிறோம்.

மத்திய அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதியாக நின்று அமல்படுத்திய பிரதமர் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பிலும், அதிமுக  சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதிமுகவின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமையும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்ற இலக்கினை அடைவதற்கான முயற்சிகளை அதிமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வெற்றி, அதிமுக நிறுவனத் தலைவர், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா மற்றும் கழகத்தினால் தொடர்ந்து பின்பற்றி வரும் சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்