கடன் தவணைக்கு கால அவகாசம்;சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை – ஓபிஎஸ் …!

Default Image

கடன் தவணையைச் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்கிறது. எனவே,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி,நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை :

கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடன் தவணைச் செலுத்துதலை மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைக்க, அதாவது 31-08-2021 வரை ஒத்திவைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடன் செலுத்தாத வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனங்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுப்பது ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை’ போலிருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவு – மீறுபவர்கள்மீது நடவடிக்கை:

கொரோனா நோய்த் தொற்று முதல் அலை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தனியார் வாகனத் தொழில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, கனரக வாகன உரிமையாளர்கள், இலகுரக வாகன உரிமையாளர்கள் தாங்கள் வாங்கிய வாகனங்களுக்கான கடன் தொகையை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் மூன்று மாத கடன் தள்ளிவைப்புக்கான உத்தரவை இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அனுப்பியது. தமிழ்நாடு அரசும் கடன் தொகை வசூலிப்பை மறு அறிவிப்பு வரும் வரை தவிர்க்குமாறு

நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதோடு, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதன் காரணமாக, வாகனக் கடன்களை வாங்கியவர்கள் பாதுகாக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கொரோனா இரண்டாவது அலையின்போது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதி வரை கடன் வசூலிப்பை நிறுத்தி வைக்க இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

கடன் வசூலிப்பில் தீவிரம் :

இருப்பினும், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவை மீறி, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் கடன் வசூலிப்பில் தீவிரம் காட்டி வருவதாகவும், முதல் அலையின்போது இதுபோன்ற பிரச்சனைகள் வந்தவுடன் காவல் துறையினர் தலையிட்டு அவற்றை தடுத்து நிறுத்தினர் என்றும், ஆனால் தற்போது புகார்களை கூட காவல் துறையினர் பெறாமல் இருக்கின்றனர் என்றும், இதற்குக் காரணம் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக காவல் துறையினருடன் கைகோர்த்து உள்ளதாகவும், 45 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் 15 இலட்சம் ரூபாய்க்கு அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் விற்கப்படுவதாகவும், மீதமுள்ள தொகையையும் அவர்களிடமிருந்தே வசூலிப்பதாகவும், சில நேர்வுகளில், தவணையை செலுத்தினாலும், கைப்பற்றப்பட்ட வாகனத்தைத் தர நிதி நிறுவனம் மறுக்கிறது என்றும் தகவல்கள் வருகின்றன. ஏலத்தில் விடப்படும் வாகனங்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது மிகவும் அவசியம் என்று வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்த புகார்களை ஆதாரங்களுடன் தருவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி நிகழ்நிலை இணைய முகப்பினை (Online Portal) உருவாக்கி உள்ளதாகவும், இதுகுறித்த புகார்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மூத்த வாகன காவல் துறை உரிமையாளர்கள் துறை அதிகாரி தெரிவித்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வெளி வந்துள்ளது. இருப்பினும், வங்கிசாரா நிதி நிறுவனங்களால் வாகன உரிமையாளர்கள் வாட்டி வதைக்கப்படுவது தொடர்வதாகத் தெரிகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்தப் புகார்களை விசாரிக்க தனிப் பிரிவை அமைக்கவோ அல்லது தனி அதிகாரிகளை நியமிக்கவோ என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு.

தமிழ்நாடு முதலமைச்சர் தனிக் கவனம் :

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, கடன் வசூலில் இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியையும் மீறி ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை தடுத்து நிறுத்தவும், வாகன உரிமையாளர்களின் புகார்களை விசாரிக்க தமிழ்நாடு முழுவதும் தனிப் பிரிவை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்