“குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” – முனைவர் சோ.சத்திய சீலன் மறைவிற்கு ,அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்…!

Default Image

பெரம்பலூர் மாவட்டத்தை  பூர்வீகமாகக் கொண்ட முனைவர் சோ.சத்திய சீலன் (88), கடந்த சில ஆண்டுகளாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் வசித்து வந்தார்.

இந்நிலையில்,அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து,சத்திய சீலன் அவர்களது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் மொழிப் பற்றாளர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில்,அவரது மறைவிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது :

“பேராசிரியர் சோ.சத்தியசீலன் காலமானார் என்ற செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். மனிதனின் வாழ்வில் குருவின் மகிமையை எடுத்து சொல்லுகையில் அருணகிரிநாதரின் “குருவாய் வருவாய் அருள்வாய் குகனே” வரியை விளக்கியது மனதில் பதிந்துள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

முனைவர் சத்தியசீலன் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.இலக்கியத் திறனுக்காக ‘கலைமாமணி’, ‘சொல்லின் செல்வர்’ போன்ற விருதுகளை இவர் பெற்றுள்ளார். மேலும், குன்றக்குடி அடிகளாரால் நாவுக்கரசர் என்ற பட்டமும் பெற்றவர்.

பள்ளி ஆசிரியர், கல்லூரி பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஆகிய பதவிகளையும் சோ.சத்தியசீலன் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்