ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி? வாருங்கள் அறியலாம்!

இஞ்சி என்றாலே அஜீரணக் கோளாறு, சளி, ஜலதோஷம் என பல நோய்களை நம்மிடம் இருந்து நீக்கக் கூடிய ஒரு மருந்து பொருளாகத்தான் பார்க்கிறோம். மேலும், காரத்தன்மை காரணமாக இஞ்சியை யாருமே அப்படியே சாப்பிட்டு விட முடியாது. உணவுகள் மூலமாக தான் நாம் இஞ்சியை சேர்த்துக் கொள்கிறோம். ஆனால் இஞ்சியை வைத்து எப்படி சுவையான ஆரோக்கியமான ஊறுகாயை வீட்டிலேயே செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- இஞ்சி
- புளி
- பச்சை மிளகாய்
- நாட்டு வெல்லம்
- மஞ்சள்தூள்
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- கடுகு
செய்முறை
முதலில் இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பு அடுப்பில் ஒரு சட்டியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
அதன் பின் பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். அதன் பின் புளிக்கரைசல் கெட்டியாக எடுத்து இந்த இஞ்சியுடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் இஞ்சி மற்றும் புளியின் பச்சை மணம் போனதும் எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் அரை கப் வெல்லம் தூவி இறக்கி விட வேண்டும். அதன் பின்பாக சூடு ஆறியதும் எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான இஞ்சி இனிப்பு ஊறுகாய் வீட்டிலேயே தயார்.