காஷ்மீர் தலைவர்களுடனான ஆலோசனை.., 5 கோரிக்கைகள் முன்வைப்பு -குலாம் நபி ஆசாத்..!

பிரதமர் தலைமையில் காஷ்மீர் தலைவர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தலைவர்களும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தல்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் பிரதமர் இல்லத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டம் 4 மணி நேரதத்திற்கு மேல் நடந்தது.ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும், ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்துதல், ஜம்மு-காஷ்மீரில் காஷ்மீரி பண்டிக்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அமைத்தல், அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், குடியேற்ற விதிகள் ஆகிய ஐந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது என தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் பங்குபெற்ற அனைத்து தலைவர்களும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த மெஹபூபா முஃப்தி,  2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி பின் ஜம்மு காஷ்மீர் மக்கள் நிறைய சிரமங்களில் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட முறையை தங்கள் மக்கள் ஏற்கவில்லை. மாதங்களோ,  வருடங்களோ ஆனாலும் 370வது சட்டப்பிரிவை மீட்டெடுப்போம், இது எங்களின் அடையாளம். சிறப்பு அந்தஸ்தை நாங்கள் பாகிஸ்தானிடமிருந்து பெறவில்லை. அதை இந்தியா வழங்கியது என தெரிவித்தார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, காஷ்மீர், லடாக் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்  பிறகு இன்று தான் அனைத்து அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு முதல் ஆலோசனை நடத்தியது.

author avatar
murugan