கங்கா தசராவில் புனித நீராடும் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள்..!

வடமாநிலங்களில் முக்கிய பண்டிகையான கங்கா தசராவில் உத்திரப்பிரதேசம், உத்தரகண்ட் மக்கள் சமூக இடைவெளியை மறந்து புனித நீராடி வருகின்றனர்.

கொரோனா இரண்டாம் அலையால் பெரிய பாதிப்புகளை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை  கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது போன்ற பல தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த வருடமும், இந்த வருடமும் பல கோவில் திருவிழாக்கள் பக்தர்களின்றி நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த கும்பமேளா பண்டிகையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக கலந்து கொண்டு சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டனர். இதனால் கொரோனா பாதிப்பு மிக அதிகளவில் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில், தற்போது கங்கா தசரா பண்டிகையில் உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மக்கள் சமூக இடைவெளியை மறந்து புனித நீராடி வருகின்றனர்.

இதுகுறித்து வட்ட அதிகாரி தெரிவிக்கையில், வீடுகளில் மக்களை புனித நீராடும் படி அறிவித்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு இல்லை என்ற ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் வைத்திருப்பவர்களை கரையோரப்பகுதியில் அனுமதிப்பதாக தெரிவித்துள்ளனர். கொரோனா விதிகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருவதாக கூறியுள்ளார்.