“10 ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வேண்டும்” – ஓபிஎஸ் வலியுறுத்தல்..!

Default Image

பத்தாம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய அனைவரையும் கலந்தாலோசித்து ஏதாவது ஒரு வழிமுறையைப் பின்பற்றி பத்தாம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழிவகை செய்ய வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு’, ‘நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி’ என்ற வரிசையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படமாட்டாது என்றும், ‘தேர்ச்சி’ என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் அண்மையில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது, மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கொரோனா தாக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படாத சூழ்நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்களும் வழங்க உத்தரவிடப்பட்டு,அதன்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நடப்பாண்டில்,பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட சூழ்நிலையில்,அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்குவதற்காக உயர்மட்டக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருக்கிறது. இந்தக் குழு பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30 விழுக்காடு மதிப்பெண்களும், பதினோறாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30 விழுக்காடு மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 விழுக்காடு மதிப்பெண்களும் அளித்து 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களை நிர்ணயிக்கப் போவதாக செய்திகள் வெளி வருகின்றன.

இதேபோல், சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மாணாக்கர்களைப் பொறுத்தவரையில், உள் மதிப்பீட்டிற்கு 20 விழுக்காடு மதிப்பும், பொதுத் தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு 80 விழுக்காடு மதிப்பும் அளித்து, அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

நடப்பாண்டில், தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும், ‘தேர்ச்சி’ என்று மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என்றும் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

எந்த மதிப்பெண் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்புமாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அல்லது எந்த மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அந்த அடிப்படையிலாவது பத்தாம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. ஏனென்றால், முக்கியத்துவம் வாய்ந்த பத்தாம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களின் மனங்களில் நிலவுவதுதான்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தலையிட்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய அனைவரையும் கலந்தாலோசித்து ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி பத்தாம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Anbumani Ramadoss - Dr Ramadoss
RCB - IPL 2025
mk stalin
dominicanRepublic
Good Bad Ugly Review
PMK Leader Dr Ramadoss - Anbumani Ramadoss