“நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்” – முதல்வர் ஸ்டாலின் ட்வீட்..!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி.ராகுல் காந்தியை இன்று டெல்லியில் சந்தித்தை குறித்து, “நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்” என்று முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,2 நாள் அரசுமுறை பயணமாக, சென்னையில் இருந்து நேற்று காலை தனி விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். இதனையடுத்து,நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்த அவர், தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் வழங்கி உள்ளார்.

அதன்பின்னர்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின் போது,காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்களும் உடன் இருந்தார்.முதலமைச்சராக பதவியேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சோனியாகாந்தி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதலமைச்சரான பின்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சோனியாகாந்தி அவர்களை முதல்முறையாக சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,இந்த சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களையும்,முன்னாள் தலைவர் சகோதரர் திரு.ராகுல்காந்தி அவர்களையும் சந்தித்துப் பேசினோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் காலந்தொட்டே தொடரும் உறவு இது! நெஞ்சுக்கு நெருக்கமாக உணர்ந்தேன்!”,என்று தெரிவித்துள்ளார்.