#Breaking:”மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது” – டாஸ்மாக் மேலாண் இயக்குனர்

  • தமிழகத்தில் வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை ஊரடங்கை மேலும் நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
  • இதனால்,அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த,கடந்த மே மாதம் 24 ஆம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது வரும் ஜூன் 7 ஆம் தேதியன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில்,வருகின்ற ஜூன் 14 ஆம் தேதி காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி,காய்கறி,மளிகைக்கடைகள் போன்ற சில கடைகள் மற்றும் நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,டாஸ்மாக் கடை இயங்க அனுமதி இல்லை.

இந்நிலையில்,ஊரடங்கு நீட்டிக்கபட்டதன் காரணமாக,தமிழக அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில்,கூறப்பட்டிருப்பதாவது:

  • அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை தமிழக அரசின் மறுஉத்தரவு வரும் வரை,மூடுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
  • மேலும்,டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு அடிக்கடி சென்று கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
  • அனைத்து மாவட்ட மேலாளர்களும் விழிப்புடன் இருக்கவும், சட்டவிரோதமாக மதுபான விற்பனை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்,இந்த ஊரடங்கு காலகட்டத்தில் எந்தவொரு கடைகளிலும் திருட்டுக்கு எந்த முயற்சியும் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட வேண்டும்.
  • உங்கள் அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்தவொரு கடைகளிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மாவட்டத்தில் உள்ள தடை அமலாக்க பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • உங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் நிறுவப்பட்டுள்ள அனைத்து சி.சி.டி.வி கேமராக்களும் சரியாக செயல்படுவதையும்,அந்த காட்சிகள் பதிவு செய்யப்படுவதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதி செய்வார்கள்.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.