வாக்களித்தபடி சீரம் நிறுவனம் தடுப்பூசியை கோவாக்ஸ் அமைப்புக்கு வழங்க வேண்டும் – WHO தலைவர்!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறைந்த பின்பு சீரம் நிறுவனம் பிற நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் கூறியுள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அவர்கள் இணையம் வழியாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக உலக சுகாதார நிறுவனத்தின் கீழ் கோவாக்ஸ் அமைப்பு செயல்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தாங்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு தடுப்பூசி வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அமைப்பின் மூலமாக இதுவரை 124 நாடுகளுக்கு 6.50 கோடி டோஸ் தடுப்பு ஊசிகள் வினியோகித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனாகா கூட்டு தயாரிப்பான தடுப்பூசியை இந்தியாவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் கோவாக்ஸ் அமைப்புக்கு சீரம் நிறுவனம் தடுப்பூசியை அனுப்ப முடியவில்லை எனவும், இந்தியாவில் கொரோனா குறைந்த பின்பு ஏற்கனவே அளித்த உறுதிமொழியின் படி சீரம் நிறுவனம் கோவாக்ஸ் அமைப்புக்கு தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு நீடித்து வருவதால் கோவாக்ஸ் அமைப்புக்கு தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருவதாகவும் அடுத்த மாத இறுதிக்குள் தடுப்புசி பற்றாக்குறை 19 கோடியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை 50 கோடி டோஸ் தடுப்பு ஊசிகளை மாடர்னா நிறுவனம் வழங்குவதாக உறுதி அளித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal