#Breaking: உடனடியாக கட்டளை மையம் (War Room) திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்

கொரோனா தடுப்பு பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன. உயிர் பயத்தோடு இருக்கும் மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ அவசரநிலை அளவுக்கு கொரோனா தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாக கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிஜன் தேவை – இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவையை தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மையம் உதவியாக இருக்கும்.

முன்களப் பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது. மருத்துவ அவசர நிலைக்காலம் என்பதால் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

கட்டணத்திலும் முடிந்தளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஏழை – எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரைச் செலவில்லாமல் மீட்டுத் தர வேண்டும். இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல என அந்த அறிக்கையில் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்