இன்று மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க ஆ.ராசாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!

முதலமைச்சர் பழனிசாமி குறித்த பேச்சு பற்றி விளக்கமளிக்க ஆ.ராசாவிற்கு இன்று மாலை 6 மணிக்குள் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திமுக எம்.பி ஆ.ராசா, ஆயிரம் விளக்குத் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டபோது, முதல்வரை பற்றி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. ஆ.ராசாவின் பேச்சுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பிரசாரத்தில் தரக்குறைவாக பேசி வரும் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இனிவரும் காலங்களில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகாரளித்திருந்தது.

இதற்கிடையில்,  இன்று தாராபுரம் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி இழிவுப்படுத்தி பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி குறித்த பேச்சு பற்றி  ஆ.ராசா இன்று  மாலை 6 மணிக்குள் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஆ.ராசா பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

author avatar
murugan