தமிழகத்தில் கூட்டணியில் இணைவதே பெரிய போராட்டம் – தொல் திருமாவளவன்
தமிழக அரசுயலில் கூட்டணி அமைப்பதே பெரிய போராட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் தொல் திருமாவளவன், தமிழகத்தில் இரு கட்சிகளும் கூட்டணிக்கு அழைக்கக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாகவும் கூறியுள்ளார். எங்களை பிடிக்காதவர்கள் 2, 3 சீட்டுகள் என்பார்கள், அவர்கள் கூட்டணியில் சேர்வதற்கே தகுதி இல்லாதவர்களாக இருப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தளவில் கூட்டணியில் இணைவது என்பதே ஒரு பெரிய போராட்டம். ஒரு கட்சி கூட்டணியில் இடம்பெறுகிறது என்பது சாதாரணமான ஒன்று அல்ல, அவ்வளவு எளிதாக கூட்டணியில் இணைத்துக் கொள்ளமாட்டார்கள். உரிய அங்கீகாரத்தை தந்துவிடமாட்டார்கள் என கூறியுள்ளார்.
ஆனால், தொடக்கத்தில் இருந்தே விடுதலை சிறுத்தைகளின் தேவை இருந்ததால் தமிழக அரசியலில் இரு அணிகளிலும் மாறிமாறி இருந்தது. நாங்கள் அதற்காக வேலை செய்யவில்லை, எங்கள் பக்கம் வாருங்கள் என்று அழைக்கக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.