“கபி.. கபி.. மேரா தில் மே” இந்தி பாடலை பாடி விவாதத்தை ஏற்படுத்திய எம்பி திருச்சி சிவா.!
டெல்லியில் பிரிவு உபசரிப்பு விழாவில் எம்பி திருச்சி சிவா, இந்தி பாடலை பாடியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் கடந்த வாரம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவருக்கு திமுக எம்பி திருச்சி சிவா டெல்லியில் உள்ள தமது இல்லத்தில் நடத்திய பிரிவு உபசரிப்பு விழாவில் இந்தி கச்சேரி கலைக்கட்டியது.
இந்த கச்சேரியில் பங்கேற்று திருச்சி சிவா, கபி.. கபி.. மேரா தில் மே.. என்று இந்தி பாடல் பாடி குலாம் நபி ஆசாத்துக்கு பிரிவு உபசரிப்பு செய்தார். இதனிடையே, இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் ஒரே அணியில் நிற்க, அண்மையில் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் வைரலாகியது.
மேலும் திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோரும் இந்தி தெரியாது போடா என்ற ஹாஸ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டனர். இந்நிலையில், திமுக எம்பியும், பொருளாளருமான டிஆர் பாலு, டிகேஎஸ் இளங்கோ ஆகியோர் முன்னிலையில், அக்கட்சி எம்பி திருச்சி சிவா, இந்தி பாடலை பாடியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி திணிப்புக்கு எதிராக பல ஆண்டு காலமாக போராடி வருவதாக திமுக கூறி வரும் நிலையில், ஊருக்குத்தான் உபதேசமா என்பது போல் பல்வேறு தரப்பினர் கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர். திருச்சி சசிவாவை சக எம்பிக்கள் நகைச்சுவையாக பாராட்டியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.