பவானி ஆற்றுப்படுகையில் இன்று முதல் துவங்குகிறது யானைகள் நலவாழ்வு முகாம்!

48 நாட்கள் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பவானி ஆற்றுப்படுகையில் யானைகளுக்கான இந்த முகாம் துவங்குகிறது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி என்னுமிடத்தில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்கள் நடத்த வேண்டும் என தமிழக அரசால் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இதற்கான அரசாணையும் அன்மையில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் யானைகளுக்கு நடைபெறக்கூடிய இந்த சிறப்பு முகாமில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட யானைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும், கொரோனா பரிசோதனை செய்து, மருத்துவர் சான்றிதழ் இல்லாத ஏழைகளுக்கு அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யானைகளுடன் முகாமிற்கு செல்லக்கூடிய பணியாளர்களும் கொரோனா பரிசோதனை செய்து அதன் பின்புதான் யானைகளுடன் நலவாழ்வு முகாமில் பங்கு பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இதற்கான முதல் நாள் முகாம் பவானி ஆற்றுப் படுகையில் துவங்க உள்ளது. 48 நாட்கள் நடைபெற உள்ள இந்த சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று காலை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் துவங்க உள்ளது. இதில் புதுச்சேரி, அறநிலையத்துறை கோவில்கள், திருமடங்கள் ஆகியவற்றில் உள்ள பல்வேறு யானைகள் பங்கேற்க உள்ளன. யானையை அழைத்து வரக் கூடிய வழியில் மின்கம்பிகளை கவனித்து பாதுகாப்பாக வரவேண்டும் எனவும், கொரோனா வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.