அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் ரத்து – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Default Image

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக  முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இது தவிர, சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே போன்று, 2,338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் பணியமர்த்தப்பட்டனர்.

மேற்குறிப்பிட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, அப்போராட்டத்திற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின் போது, போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, நீதிமன்றத்தால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், அரசு வாழியர்களும், ஆசிரியப் பெருமக்களும் தங்களுடைய போராட்டங்களை உடனடியாக கைவிட்டு, மக்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென 29.1.2019 அன்று நான் அன்புடன் கேட்டுக் கொண்டேன். இதனையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்ப பெற்றுக் கொள்வதாக 30.1.2019 அன்று அறிவித்து, உடனடியாக பணிக்கு திரும்பினர்.

அரசால் எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கைகளையும், வழக்குகளையும் திரும்ப பெற, அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஏற்கனவே என்னிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர். இன்று (1.2.2021), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், மாண்புமிகு மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் அவர்களை சந்தித்து, மேற்கூறிய தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். மாண்புமிகு அமைச்சர் அவர்களும், இது குறித்து எனது கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக அச்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார்கள்.

இக்கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் மாண்புமிகு அம்மாவின் அரசு கைவிடுகிறது. அரசு எடுத்துள்ள இந்த நல்ல முடிவை ஏற்று, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மேலும் ஊக்கமுடனும், ஆக்கமுடனும் சிறப்பாக மக்கள் பணி மற்றும் கல்விப்பணியை தொடர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்