மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோடும் முனைப்பில் ஹோண்டாவின் புதிய 125சிசி பைக்…!!
ஹோண்டா நிறுவனம் புதிய சிபி125எஃப் பைக்கை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பைக்கின் காப்புரிமை படங்கள் இணையதளங்களில் வெளியாகி இருப்பதால், கூடிய சீக்கிரமே விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாக தெரிகிறது.
ஹோண்டா சிபி 125எஃப் பைக்கின் டிசைன் பழைய மாடலை ஒத்திருந்தாலும், சிறிய அளவிலான மாற்றங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஹெட்லைட் பழைய மாடலிலை ஒத்திருக்கிறது.
அதேநேரத்தில், வைசர் அமைப்பு, மட்கார்டு மற்றும் பெட்ரோல் டேங்க் ஆகியவை புதியவையாக உள்ளன. புகைப்போக்கி குழாய் அளவு குறைந்திருப்பது வசீகரமாக இருக்கிறது.
புதிய ஹோண்டா சிபி 125எஃப் பைக்கில் எல்இடி ஹெட்லைட் இடம்பெறும் என்று தெரிகிறது. ஹோண்டா ஷைன் பைக்கில் இருக்கும் அதே 124.7 சிசி பிஎஸ்-4 எஞ்சின்தான் இந்த புதிய மாடலிலும் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.3 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த பைக் லிட்டருக்கு 60-65 கிமீ மைலேஜ் தரும் வகையில் இருக்கும். முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதியும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டு இருக்கும்.
இந்த பைக் சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் தொழில்நுட்பத்தையும் பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா ஷைன் பைக்கைவிட விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்படும்.