அரசாணையை உடனடியாக ரத்து செய்யக்கோரி IMA ஆர்ப்பாட்டம்.. எய்ம்ஸ் நிர்வாகம் ஆதரவு!

ஆயுர்வேதம் படித்த மாணவர்கள் எந்தொரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக அறிவிக்கப்பட்ட அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்தியாவில் தேசிய கல்வி கொள்கை மூலமாக ஆயுஷ் மருத்துவமுறையை பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது. இதனால் அலோபதி மருத்துவமுறையில் குறைந்தபட்சம் 5½ ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், நீட் நுழைவு தேர்வு எழுதிய பின்னரே அறுவை சிகிச்சை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால் தற்பொழுது மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின் மூலம் ஆயுர்வேதம் படித்த மாணவர்கள் எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை மருத்துவர்களாக அறிவிக்கப்பட்டனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மயக்க மருந்து ஆயுர்வேத மருத்துவமுறையில் இதுவரை இல்லையெனவும், இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட அதிகளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது,

இந்தநிலையில், இந்த அரசாணையை உடனடியாக ரத்து செய்யக்கோரி, இந்திய மருத்துவ சங்கம் (IMA) நாடு முழுவதும் 10,000 இடங்களில் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கம் நடத்தவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம், தனது ஆதரவினை தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வரும் 11 ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை விபத்து, அவசர சேவை, ஐ.சி.யூக்கள், கொரோனா சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சைகள் மற்றும் தொழிலாளர் அறை உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளை தவிர, மற்ற அனைத்து சிகிச்சைகளை தவிர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.