ஈரோடு பெரிய மாரியம்மன் கம்பம் ஊர்வலம்…! ஆயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு…!!

Default Image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் ஊர்வலம் நடந்தது விழாவின் போது ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீர் ஊற்றி உற்சாகமாக விழாவை கொண்டாடினார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பெருமை பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்குவது ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில். கொங்கு மண்டலத்தின் குல தெய்வமாக போற்றப்படும் பெரிய மாரியம்மன் கோவில் ஈரோட்டில் அமைந்து உள்ளது. பெரிய மாரியம்மன் மற்றும் வகையறா கோவில்களான சின்ன மாரியம்மன் (நடுமாரியம்மன்), காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 24-ந் தேதி 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது. கம்பத்துக்கு பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர். குறிப்பாக பிரப் ரோட்டில் உள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் இரவு, பகலாக பல்லாயிரக்கணக்கானவர்கள் வரிசையில் காத்து நின்று கம்பத்துக்கு தண்ணீர், மஞ்சள் நீர், பால் ஊற்றி வழிபட்டனர்.

பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஈரோடு மட்டுமின்றி கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் தண்ணீர் வசதி செய்யப்படும்.

மேலும், பக்தர்கள், தனியார் நிறுவனத்தினர் நீர்மோர் பந்தல் வைத்தும், உணவு பந்தல்கள் அமைத்தும் பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர், கூழ் ஆகியவை வழங்கி வந்தனர். 29-ந் தேதி கோவில் கொடியேற்று விழா நடந்தது.

முக்கிய விழாவான கம்பம் பிடுங்கும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி வழக் கத்தை விட அதிகமாக பெண்கள் வந்து கம்பத்துக்கு புனித நீர் ஊற்றினார்கள். பிற்பகல் 2 மணி அளவில் 3 கோவில்களிலும் கம்பம் பிடுங்குவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கின. 2.30 மணி அளவில் கம்பங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கம்பங்களில் கட்டப்பட்டு இருந்த வேப்பிலைகள் அகற்றப்பட்டது. கம்பத்தில் வைக்கப்பட்டு இருந்த அக்னி சட்டி எடுக்கப்பட்டது. பின்னர் பக்தர்களின் தலையில் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. பிற்பகல் 3 மணி அளவில் கம்பங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டன. அப்போது கூடி இருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பினார்கள். 3 கோவில்களிலும் அடுத்தடுத்து கம்பங்கள் பிடுங்கப்பட்டன. அவற்றை பூசாரிகள் தோளில் சுமந்து கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர்.

பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை, மேளங்களுடன் கம்பம் புறப்பட்டது. பன்னீர்செல்வம் பூங்கா வழியாக கம்பம் கொண்டு வரப்பட்டு மணிக்கூண்டு பகுதிக்கு வந்து சேர்ந்தது. இதுபோல் காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில், நடுமாரியம்மன் கோவில்களில் இருந்து கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு கொண்டு வரப்பட்டன. 3 கம்பங்களும் மணிக்கூண்டு வந்தடைந்தன. பின்னர் 3 கம்பங்களுடன் ஊர்வலம் தொடங்கியது.

கம்பத்தை சுமந்து கொண்டு பூசாரிகள் முன்னே செல்ல சாலையின் 2 பக்கங்களும் ஏராளமான பக்தர்கள் கூடி வரவேற்றனர். ஈரோடு ரவுண்டானா பகுதியில் ஊர்வலம் வந்தபோது மேட்டூர் ரோடு, பிரப் ரோடு பகுதியில் இருந்து வந்து கூடிய மக்களால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலையாகவே இருந்தது.

நேற்று கடுமையான வெயிலாக இருந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பக்தர்களின் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன. குளிர்பானங்கள், தண்ணீர் ஆகியவையும் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் தலைமையில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு வி.ராதாகிருஷ்ணன், மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர்கள் விஜயன், ரவிக்குமார், கண்ணன், சேகர், ராஜகுமார், முருகையன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், சாலைபாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்..,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்