ஸ்டாலினை சந்திக்கும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் ! தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்பு

சட்டமன்ற தேர்தல்  நெருங்கி வரும் நிலையில்,இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திக்கிறார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது .தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.இதனிடையே அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முதல்வராக அமரவைக்க காங்கிரஸ் பாடுபடும் என்று தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.மேலும் தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேரம் பேசமாட்டோம். கடும் போட்டி நிலவும் 100 தொகுதிகளில் திமுகவுக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் . எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.இதற்குப்பின்னர் தான் தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தான் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திக்கிறார்.இந்த சந்திப்பின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.இந்த சந்திப்பின் போது , தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்பு உள்ளது.