விவசாயிகளின் போராட்டத்தை மதித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – கட்சித் தலைவர்கள் அறிக்கை

Default Image
விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை பிரதமர் மோடி மதித்து – நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கையை முன்வைத்துச் சளைக்காத தீரத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஜனநாயக ரீதியிலான இந்தப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும்; விவசாயிகளின் அடிப்படை உணர்வுகளை மதித்து, அவர்கள் ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு அனுமதியளித்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அங்கேயே சென்று, இந்த நாட்டின் உயிரைக் காப்பாற்றும் உழைக்கும் வர்க்கமான விவசாயப் பெருமக்களிடம் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அந்த மைதானத்திலேயே அறிவிக்க வேண்டும் என்றும்; வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். உணவுப் பாதுகாப்பின் கேந்திர மையமாகத் திகழும் வேளாண்மையையும், அதன் உயிரோட்டமாகத் திகழும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களையும் காப்பாற்றிட, எவ்வித நிபந்தனையும் விதிக்காமல், பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மனமார முன்வர வேண்டும் என்று பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.டெல்லியை நோக்கி ‘டெல்லி சாலோ’ என்ற பெயரில் விவசாயிகள் பேரணியை நடத்தினார்கள்.ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,
பின்பு டெல்லியில் உள்ள புராரி பகுதியில் போராட அனுமதி அளிக்கப்பட்டது.இதனால் 5-வது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் ,ஹரியானா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்திர பிரதேச விவசாயிகளும் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்