வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக- டிரம்ப்.. ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும்- கமலா ஹாரிஸ் அனல்பறக்கும் ட்விட்டர்!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் ட்வீட் செய்த நிலையில், ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும் என கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப், 214 சபை வாக்குகளை பெற்று பின்னடைவில் இருக்கிறார்.

இதன்காரணமாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடும் கமலா ஹாரிஸ், தக்க பதிலடியை கொடுத்துள்ளார். அவரின் ட்விட்டர் பதிவில், ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும் என தெரிவித்துள்ளார்.