அழுத்தத்தில் அதிமுக:எது நடக்க இருக்கிறதோ! அதுவும் நன்றாக நடக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து  சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள பகுதியில் 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டடத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கூறுகையில்

இன்று சர்வதேச முதியோர் தினம் .முதியோர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்; இளைஞர்கள் முதியோரை மதிக்க வேண்டும். குறிப்பாக, அரசியலில் முதியவர்களை உதயநிதி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், திமுக ஜனநாயகக் கட்சி இல்லை, ஜாமீன் கட்சியாக மாறிவிட்டது என்றும்  குடும்ப உறுப்பினரான நயன்தாரவிற்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கலாம் என்றும் விமர்சித்தார்.

அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின் அதிமுக இரண்டாகப் பிரிய வாய்ப்பு உள்ளதா?? என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், கட்சி பிரிய வாய்ப்பு இல்லை. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கட்சியைச் சேர்ந்தவர்களைத்தான் சந்தித்து பேசுகிறார். அதில் எத்தவறும் இல்லை. அக்கட்சி குறித்து ஆலோசனை நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் செயற்குழு நடைபெறும்; இதன்பின்பு தீர்மானம் நிறைவேற்றப்படும். பெரிய அளவுக்கு எதுவும் இல்லை.

முதலமைச்சர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு கட்சி உரிய நேரத்தில் அதனை அறிவிக்கும் என்றார்.மேலும் கட்சியின் ஆரோக்கியமான விவாதம் இருந்தது. அதை வெளியில் சொல்லக்கூடாது. காலம் முற்றுப்புள்ளி வைக்கும். பலசோதனைகளைக் கடந்துதான் அதிமுக வெற்றி பெற்று இருக்கிறது. இதற்காக வருத்தப்படவேண்டியது இல்லை. எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கும். அதிமுக ஜனநாயக கட்சி என்பதில் மாற்றமில்லை என்றார்.

author avatar
kavitha