டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 4,235 பேருக்கு தொற்று உறுதி!
டெல்லியில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 4,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியது. மேலும், கொரோனாவின் இரண்டாம் அலை பரவ தொடங்கியதாக வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று ஒரே நாளில் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,18,304 ஆக உயர்ந்துள்ளது. இன்று 56,656 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மொத்தமாக அம்மாநிலத்தில் 21,39,432 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் 29 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,744 ஆக உள்ளது. ஒரே நாளில் 3,403 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1,84,748 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி 28,812 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.