பாஜக உ.பி.யில் எதிர்கட்சி எம்எல்ஏக்களை வளைக்க திட்டம்?

இன்று நடைபெற்று வரும் தேர்தல்  மாநிலங்களவையில் பெரும்பான்மை பெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் பாஜகவிற்கு மிக முக்கியமாகும். குஜராத்தை போல உத்தரப் பிரதேசத்திலும் எதிர்கட்சியை வெற்றி பெறவிடாமல் தடுக்கும் பொருட்டு அந்த கட்சிகளின் எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

குஜராத்தில் மாநிலங்களவை தேர்தல் கடந்த ஆண்டு நேற்று நடைபெற்றது. காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலை தோற்கடிக்க, காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை பாஜக இழுத்தது. இதனால் பெங்களூரு ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் அடைத்து வைக்கப்பட்டனர். வாக்குபதிவுக்கு முதல்நாள்தான் எம்எல்ஏக்கள் குஜராத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இருப்பினும், வாக்குப் பதிவு நடைபெற்ற போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவிற்கு வாக்களித்தனர்.

அவர்களில் இருவர் நாங்கள் பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என பகிரங்கமாகவே பேட்டி கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் அளித்த வாக்கு செல்லாததாகியது. இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலை தோற்கடிக்க அமித் ஷா மேற்கொண்ட திட்டம் பலிக்கவில்லை. அவரது ராஜதந்திரத்திற்கு பெரிய சறுக்கலாக கருதப்பட்டது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.மொத்தம் 58 எம்பிக்களின் பதவிக்காலம் முடிந்ததை தொடர்ந்து அந்த இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 33 பேர் போட்டியின்றி எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். 26 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

உத்தப் பிரதேசத்தில் 10, மேற்குவங்கம், 5, கர்நாடகா 4, தெலுங்கானா 3, கேரளா 1, ஜார்கண்ட் 2, சட்டீஸ்கர் 1 ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் தேர்தல் முக்கியமானதாகும். இங்கு 10 இடங்களில் 8 பேரை தேர்வு செய்வதற்கு பாஜகவிற்கு போதிய பலம் உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு ஒரு எம்பியை தேர்வு செய்ய முடியும். மீதமுள்ள ஒரு இடத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது.

அவருக்கு சமாஜ்வாதி கட்சியின் மீதமுள்ள எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  ஆதரவு வழங்கியுள்ளனர். ஆனால் அதனை தட்டிப் பறிக்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக செயல்பட்டு வருகிறது. எனவே எட்டு பேரை தவிர மேலும் ஒருவர் பாஜக ஆதரவுன் களம் இறங்க்கப்பட்டுள்ளார். தேர்தல் தொடர்பாக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன், அக்கட்சித் தலைவர் அமித் ஷா பேசி வருவதாக கூறப்படுகிறது.காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களை கட்சி மாறி வாக்களிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் தங்கள் எம்எல்ஏக்கள் தக்க வைத்துக் கொள்ள அந்தந்த கட்சிகள் போராடி வருகின்றன.

மாநிலங்களவையில் தற்போது பாஜகவின் பலம் 58 ஆக உள்ளது. இந்த தேர்தலுக்கு பின் பாஜகவின் மூலம் 69 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படகிறது. மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர். இவர்களில் 233 பேர் கட்சிகளால் தேர்வு செய்யப்படுகின்றனர். 12 பேர் நியமன எம்பிக்கள் ஆவர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment