விநாயகர் சதுர்த்தி இந்துக்களுக்கு போராட்ட காலமாகத் தான் இருக்கும் – ஹெச் ராஜா

விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல தடை போன்ற செயல்களை தமிழக அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் – ஹெச் ராஜா

வருகிற 22-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதித்தற்கு சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஹெச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி இந்துக்களுக்கு போராட்ட காலமாகத் தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. எதையும் எதிர் கொள்வோம்.

விநாயக சதுர்த்திக்கு எதிராக போலீஸ் அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  விநாயகர் சிலைகள் செய்யும் இடங்கள் சீல் வைக்கப்படுவது, விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல தடை போன்ற செயல்களை தமிழக அரசு உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.