நியூசிலாந்து துப்பாக்கிசூடு- தண்டனை குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் வழக்கறிஞர்களை நீக்கிய பயங்கரவாதி

 நியூசிலாந்து மசூதிகளில் நடத்திய  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் தனது வழக்கறிஞர்களை நீக்கியுள்ளார்.

கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி, நியூசிலாந்தின் உள்ள கிறைஸ்ட்ச்சர்ச்சில் உள்ள 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது .இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடத்திய நபர் துப்பாக்கிச்சூட்டை  ஃபேஸ்புக்  பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்தார்.இதன் பின்  அந்நாட்டில் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது 25) தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை ஃபேஸ்புக்   பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தார். இதனையடுத்து, இவர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பிரெண்டன் டாரண்ட் நடைபெற்ற விசாரணையின் போது தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தார். ஆனால் கொரோனா காரணமாக நியூசிலாந்தில்   ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சமயத்தில் காணொலி காட்சி மூலமாக பிரெண்டன் டாரண்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது  வழக்கறிஞர்களை காணொலி காட்சி மூலமாகவே ஆஜராகி வாதாடினர்.

விசாரணையின் போது பிரெண்டன் டாரண்ட் தன் மீதான கொலை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.  அதனை தொடர்ந்து, இந்த வழக்கில் பிரெண்டன் டாரண்டை நீதிபதிகள் குற்றவாளி என அறிவித்தனர். அவருக்கான தண்டனை  விவரங்கள் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரெண்டன் தனது வழக்கறிஞர்களை நீக்கம் செய்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.அவர் குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில் அவரின் முடிவுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.