விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

 தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு நேற்று விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில்,கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக்  காவலராகப் பணிபுரிந்து வந்தார்.அவர் 7- ஆம் தேதியன்று தமிழக -கர்நாடகா எல்லையில் உள்ள ஜூஜூவாடியில்,கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த போது, சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த டிப்பர் லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதியதில்,கண்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.அப்போது தடுப்பின் மறுபுறம் இருந்த தலைமை காவலர் சேட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

பணியின்போது உயிரிழந்த தலைமைக்  காவலர் சேட்டு அவர்களை இழந்துவாடும் அன்னாரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.சேட்டு அவர்களின் குடும்பத்திற்கு சிறப்பினமாக ,முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.மேலும் அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.