தாளாளர் முறைகேடு செய்வதாக கூறி, ஆசிரியை விஷமருந்தி தற்கொலை செய்ய முயற்சி…!
திருச்செந்தூர்: திசையன்விளை அருகேயுள்ள அரசூர் பூச்சிக்காட்டில் பணி வழங்குவதில் தாளாளர் முறைகேடு செய்வதாக கூறி, ஆசிரியை விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசூர் பூச்சிக்காட்டைச் சேர்ந்த லெபர்லின் மனைவி அருள் சுலோச்சனா (31). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. அருள்சுலோச்சனா பூச்சிக்காடு புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் கடந்த ஓராண்டாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம், பள்ளியின் தாளாளர் இவருக்கு பணி ஆணை வழங்குகிறார். இந்நிலையில் இவருக்கு பதிலாக அதே பணியிடத்தில், வேறு ஒருவருக்கும் பள்ளி நிர்வாகம் நியமன ஆணை வழங்குகிறது. இதனால் அருள் சுலோச்சனா, மனமுடைந்து ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், வீட்டிலிருந்த பூச்சி மருந்தினை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வீட்டில் உள்ளோர் அவரை மீட்டு, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.