காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது-தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

நேற்று வடகிழக்கு டெல்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நேரில் ஆய்வு செய்தார். இதன்பின் அவர் பேசுகையில், தற்போது நிலைமை முற்றிலும் கட்டுப்பாட்டில் உள்ளது. காவல்துறை அதன் கடமையை செய்து வருகிறது. காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் வன்முறை நிலைமையை சீராக்கவும் மற்றும் இயல்புநிலை திரும்ப உரிய நடவடிக்கைகளை எடுக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் டெல்லி கலவரத்தினால் பாதிக்கப்பட்ட சீலம்பூர், ஜாப்ராபாத், மவுஜ்பூர், கோகுல்புரி சவுக் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் சட்டம் ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி கவர்னர் அனில் பைஜால் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.