நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு…

  • தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில்  பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கு நீதிமன்றம்  தூக்கு தண்டனை விதித்துள்ளது.
  • இது குறித்த இறுதி தீர்ப்பு இன்று வர உள்ளது.

இந்த கொடூர குற்றவாளிகள் தனித்தனியாக கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து வருவதை தொடர்ந்து, இவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடந்த 1-ம் தேதி டெல்லி திஹார் சிறையில் தூக்கிலிட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவில், குற்றவாளிகளை டில்லி பாட்டியாலா செசன்சு நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து மத்திய,மாநில அரசுகள் சார்பிலும் டில்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி சுரேஷ் கயித், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் நிர்பயாவின் பெற்றோர் டில்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரு புதிய  மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘குற்றவாளிகளுக்கான துாக்கு தண்டனையை நிறைவேற்ற, செசன்ஸ் நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும்’ என, வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு மனு மீது, டில்லி உயர்நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.