ஒரு பதவிக்கு 2 பேருக்கு வெற்றி சான்றிதழ் வழங்கிய தேர்தல் அதிகாரிகள்.!
- தமிழகத்தில் நேற்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி மற்றும் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக வெற்றிச்சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 முறை தலைவராக இருந்த மாங்குடியின் மனைவி தேவி போட்டியிட்டார். அவரை எதிர்த்து தொழில் அதிபர் அய்யப்பன் மனைவி பிரியதர்ஷினி போட்டியிட்டார்.
நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னணி நிலவரம் அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தது.இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு வெற்றிச்சான்றிதழும் கொடுக்கப்பட்டது.
இதனால் எதிர்தரப்பினருக்கும் , தேவி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரியதர்ஷினி தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என கூறினர்.
இதனால் அதிகாலை 2 மணி வரை பேச்சுவார்த்தை சென்றது.பின்னர் வெற்றிச் சான்றிதழ் பெற்று விட்ட தேவி தரப்பினர் சென்று விட்டனர். ஆனால் எத்தித்தரப்பினர் அங்கேயே அமர்ந்திருந்தனர். இதையடுத்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் தேவி தரப்பினர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்படி அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வரவில்லை.
பின்னர் காலை 5 மணிக்கு பிரியதர்ஷினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 பெண்களுக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.